அமைச்சர் தங்கமணியின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு
அஇஅதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் தங்கமணியின் கட்சிப்பதவியையும் பறித்து கொங்கு மண்டல அஇஅதிமுக பிரமுகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
சென்னை: அமைச்சர் தங்கமணி, அஇஅதிமுக அம்மா அணி நாமக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அஇஅதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினமும் ஒவ்வொரு முக்கிய பிரமுகராக நீக்கி வருகிறார். இதன்மூலம் அவருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் இடையில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் தங்கமணியை நீக்கம் செய்துள்ளார் தினகரன். தங்கமணிக்கு பதிலாக எஸ். அன்பழகன் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.