கைவிடப்பட்ட சோள பயிர்கள்...101 ஆடுகள் உயிருக்கு உலை வைத்த சோகம்
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே அறுவடை செய்யாமல் கை விடப்பட்ட சோளப் பயிர்களை சாப்பிட்ட 101 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த பயிர்களை அறுவடை செய்யாமல் பெரும்பாலான விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர். விளாத்திகுளம் அருகே வவ்வால்தொத்தி ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள், ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டன.
விவசாயிகள் சிலர், பயிர்களை நிலத்திலேயே கைவிட்டுவிட்டனர். இதனால் அப்பயிர்களை கால்நடைகள் மேய்ந்து வந்தன. நேற்று முன்தினம் வவ்வால்தொத்தி கிராமத்துக்கு அருகே அயன்வடமலாபுரம் கிராம எல்லையில் வெள்ளைச்சோளம் பயிரில் சிலர் ஆடுகளை மேயவிட்டனர். இரவு தொழுவத்தில் தண்ணீர் குடித்த ஆடுகளுக்கு வயிறு உப்பிசமாகி, மூச்சுவிட திணறின. சில மணி நேரங்களிலேயே 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
தகவல் அறிந்து வந்த கால்நடைத் துறை உதவி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த மீதமுள்ள ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளுக்கு உடற்கூராய்வு செய்தனர். அதன் மாதிரிகளை ஆய்வு செய்தவற்காக எடுத்துச்சென்றனர். அறுவடை செய்யாமல் விடப்பட்ட பயிர்கள் உள்ள நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என விவசாயிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கதலைவர் அ.வரதராஜன் கூறும்போது, "மழை காரணமாக வெள்ளைச்சோளம் கதிரிலேயே கெட்டுபோய்விட்டது. கோழித் தீவனத்துக்கு அனுப்பப்பட்ட வெள்ளைச்சோள கதிர்களை திரும்ப அனுப்பிவிட்டனர். இங்குள்ள நிலத்தில் அறுவடை செய்யாமல் விடப்பட்ட வெள்ளைச்சோள கதிர்களை தின்ற ஆடுகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டு இறந்துள்ளன. இறந்த ஆடுகளுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றார்.