மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...சுனாமி ஆழிப்பேரலையின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுனாமி தாக்குதலின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மற்றும் குழந்தைகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலக மக்களை பேரதிர்ச்சி ஏற்படுத்திய சுனாமி தாக்குதல் நடந்த நாள். இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உருவான சுனாமியால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன் கடலோரப்பகுதியில் பேரழிவை உண்டாக்கியது.
குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த சுனாமி தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் ஆகும் நிலையில் தூத்துக்குடியில் இன்று சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சிறப்பு பிரார்தனை
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெற்ற சுனாமி நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் மீனவர்கள், பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். திரேஸ்புரம் கடற்கரையில் திரண்ட இவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தியும் கடலில் மலர்களை தூவியும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் கடல் தாய் அமைதியாக இருக்க வேண்டியும் மீனவர்களுக்கு எவ்வித இடர்பாடும் இன்றி மீனவர்களை கடல் தாய் காப்பாற்ற வேண்டியும் கடலில் பால் ஊற்றி பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கடலுக்கு செல்லவில்லை
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் விசைப்படகு மீனவர்க்ள் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்றைய தினம் மறக்க முடியாத தினம் என்றும் 14 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் கடல் தாய் அமைதியாக இருக்க வேண்டி சிறப்பு பிரார்தனை நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்கள் இரங்கல்
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையால் சுனாமி ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பிரார்தனையும் மேற்கொண்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
மௌன ஊர்வலம்
இதே போல், கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலூர் துறைமுகத்தில் உள்ள சிங்காரத்தோப்பு பாலத்திலிருந்து கடலூர் துறைமுகம், சொத்திக்குப்பம், சோன்ங்குப்பம், உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றியும் மலர்களை தூவியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.