7 தமிழர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது - முதல்வர் பழனிச்சாமி
ஏழு தமிழர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது வேறு, விடுதலை விவகாரம் வேறு என்றும
தூத்துக்குடி: ஏழு தமிழர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது வேறு, விடுதலை விவகாரம் வேறு என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதல்வருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் சென்ற முதல்வர் பழனிசாமி, அங்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ரூ.54.22 கோடியில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாளை முதல் மீண்டும் சுற்றுலா படகு சேவை இயக்கப்படும் என்றார்.
பள்ளிகள் திறப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த முதல்வர், நேற்று தான் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கையின் படி முடிவு எடுக்கப்படும் என்றார்.
7 பேர் விடுதலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, ஏழு பேர் விடுதலை என்பது வேறு, கல்விக்கான உள் ஒதுக்கீடு என்பது வேறு! 7பேர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் நோய் பரவல் படிப்படியாக குறைந்து உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. கேரளா சென்று திரும்பும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.