இலங்கையில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகை
தூத்துக்குடி: லாக்டவுனால் இலங்கையிலேயே சிக்கி தவித்து வந்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கப்பல் மூலமாக மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்தியர்களை அழைத்து வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் லாக்டவுன் அமலுக்கு வந்தது. லாக்டவுனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், பொதுபோக்குவரத்து உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பல லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இவர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள், கப்பல்கள் மூலம் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பி வருகிறார்கள்.
மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் நாளை கரையை கடக்கும் நிசார்கா.. ரெட் அலர்ட்டில் மும்பை
இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சமுத்திர சேது என்கிற பெயரில் கப்பல் மூலம் துபாய், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் இலங்கையில் இருந்து 700 இந்தியர்கள் நேற்று தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
700 இந்தியர்களும் இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். துறைமுகத்தில் 700 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இவை முடிந்த பின்னர் அனைவரும் அவரவர் மாவட்டங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளார்கள்.