ஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்
பெற்ற மகளை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
தூத்துக்குடி: பெற்ற பெண் என்றுகூட பார்க்காமல் கண்மூடித்தனமாக, கை வேறாக, கால் வேறாக வெட்டி சாய்த்த தகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் 2 மாச சிசு இருந்தது உச்சக்கட்ட வேதனை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமம் குளத்தூர். இங்கு வசித்து வரும் சோலைராஜா என்பவர், வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பேச்சியம்மாளை காதலித்து உள்ளார். சோலைராஜாவுக்கு வயசு 24, ஜோதிக்கு வயசு 21. ரொம்ப வருடங்களாகவே இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
புதுமண தம்பதி
எப்படியும் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் 2 மாசத்துக்கு முன்பு கல்யாணமும் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, குளத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இரு தரப்பு குடும்பத்தினரையும் போலீசார் வரவழைத்து, புதுமண தம்பதிக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். எனினும், பெண் வீட்டில் அதிக ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
கூலி வேலை
திருமணத்திற்கு பின்பு பெரியார்நகரில் வசித்து வந்தனர். சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்றுவந்த நிலையில், ஜோதி வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஜோதி கர்ப்பமாகி உள்ளார். செக்-அப்புக்காக குளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்தார்.
இரும்புவேலி
காற்றோட்டத்துக்காக சோலைராஜூம், ஜோதியும் இரவில் தங்களது வீட்டின் வளாகத்தில் பாயை விரித்து படுப்பதுதான் வழக்கம். அவர்களது வீட்டை சுற்றிலும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அப்படித்தான் நேற்று முன்தினமும் படுத்து தூங்கி உள்ளனர்.
அரிவாள் வெட்டு
இந்த இரும்பு வேலியை தாண்டி குதித்துதான் விடிகாலை 3 மணிக்கு மர்மநபர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தூங்கி கொண்டிருந்த 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
பரபரப்பு
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் தம்பதி வெளியே வராததால்தான் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். வீட்டின் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஊரே கதறி அழுதது. தகவல் அறிந்து குளத்தூர் போலீசாரும் வந்துவிட்டனர். சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் படையெடுத்து வர ஆரம்பித்துவிட்டதால், விபரீதம் ஏதும் நடக்காதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவத்தால் விளாத்திகுளமே ஆடிப்போனது
ஆர்ப்பாட்டம்
இரு சடலங்களையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவும், உறவினர்கள் அங்கு திரண்டு விட்டனர். இந்த கொலையை செய்தது பெண் வீட்டு தரப்பினர்தான், அவர்களை கைது செய்யும்வரை உடல்களை வாங்க மாட்டோம் ஆவேச ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அழகர்
இதனிடையே தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேட ஆரம்பித்தனர். பெண் வீட்டில் ஏற்கனவே எதிர்ப்பு என்பதால் இது ஆணவ கொலையாக இருக்கும் என்ற ரீதியில் விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான், ஜோதியின் அப்பா அழகரை காணவில்லை. பெண் இறந்துகிடக்கும் சமயத்தில் இவர் மாயமானது சந்தேகத்தை அதிகமாக்கியதால், அவரை வலைவீசி தேடினர்.
ஆத்திரம்
இறுதியில், கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புத்தூரில் பதுங்கி இருந்த அழகரை போலீசார் கைது செய்தனர். அழகர் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவராம். மகளின் லவ் மேட்டர் தெரிந்ததும், வேறு இடத்தில் பெண்ணை கட்டிக் கொடுக்க ஊருக்கே வந்திருக்கிறார். ஆனால் அதற்குள் மகள் கல்யாணம் செய்து கொள்ளவும், ஆத்திரம் அதிகமாகி உள்ளது. அதனால்தான் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறி உள்ளார். பெற்ற மகளை கொன்ற தகப்பனிடம் விசாரணை தொடர்கிறது.