மே 23 ஆம் தேதிக்கு பிறகு விடிவுகாலம் பிறக்கும்... மு.க.ஸ்டாலின் பேச்சு
தூத்துக்குடி: மே 23 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர்களின் தியாகத்தையும், வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மேதினப் பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி அண்ணா நகரில் தொடங்கிய மே தினப் பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று சிதம்பர நகர் மைதானத்தில் நிறைவடைந்தது. முக ஸ்டாலின் முன்னே செல்ல ஏராளமான திமுக தொண்டர்கள் அவரை பின் தொடர்ந்தனர். திமுக எம்.பி. கனிமொழியும் சிவப்பு புடவை அணிந்து தொமுசவின் மே தின பேரணியில் பங்கேற்றார்.
பேரணியை தொடர்ந்து, சிதம்பர நகர் மைதானத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் 4,5 கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
10 கோடி பேருக்கு அலெர்ட்.. 210 கிமீ வேகத்தில் வீச போகும் ஃபனி புயல்.. வானிலை மையம் எச்சரிக்கை!
தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்றும், தொழிலாளர் தோழர்களுக்கும், விவசாயிகளுக்கும் மே 23 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, விடிவுகாலம் வரும் எனவும் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று கூறிய மு.க.ஸ்டாலின், மே 1-ம் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது, கருணாநிதியின் திமுக அரசு தான் என்று பெருமிதமாக தெரிவித்தார்.