நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்
தூத்துக்குடி: நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும் என்றும், தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் அதிமுகவே இரண்டு தொகுதியில் போட்டியிட போகிறதா அல்லது திமுகவைப் போல் அதிமுவும் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு நாங்கு நேரி தொகுதியை விட்டு கொடுக்க போகிறதா என்பது தெரியவில்லை.
'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்
இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும். தலைமை யாரை போட்டியிட வைத்தாலும் வெற்றி பெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெரும்.
பல சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்து எந்த நடிகர்களும் வெற்றி பெற்றதாக தமிழகத்தில் வரலாறு கிடையாது. அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கமல் தற்போது வெளியேற தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகும் போது அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையாவது தான் ஊழல். தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சி, திமுக எதிர்க்கட்சி என 2 கட்சிகளைத் தான் மக்கள் அங்கீகரித்துள்ளனர்" இவ்வாறு கூறினார்.