தமிழகம் முழுக்க 'அம்மா தியேட்டர்கள்..' அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
கோவில்பட்டி: அம்மா திரையரங்கம் தமிழகம் முழுக்க திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் இன்று, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
பொங்கல் திரைப்படங்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியை திரையிடவில்லை என கூறி, அதற்கான டிக்கெட் முன்பதிவு பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று வந்த தவறான தகவலால் தான் நாங்கள் சிறப்பு காட்சி திரையிட்டோம் என சில இடங்களில் கூறியுள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி சிறப்பு காட்சி ஒளிப்பரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா திரையரங்கம் என்பது மாநகராட்சிக்கு மட்டும் தான் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலிக்கும்.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டுள்ளோம். வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். விரைவில் இவை அனைத்துக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.