"வண்டியை ஓரங்கட்டிட்டு அப்படியே சீட்டுல சாய்ஞ்சுட்டாரு.. ஆட்டோ மாமா.." கதறிய ஸ்கூல் பிள்ளைகள்!
உயிர் பிரியும் நேரத்திலும் மாணவிகளை காப்பாற்றி உள்ளார் ஆட்டோ டிரைவர்
தூத்துக்குடி: ஸ்கூல் பிள்ளைகளை ஏற்றி கொண்டு... ஆட்டோ ஓட்டிக் கொண்டே வந்த ராமலிங்கத்துக்கு திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டது.. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய அடுத்த செகண்டே அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.. கடைசி நேரத்தில் குழந்தைகளை காப்பாற்றிய இந்த ஆட்டோ மாமா சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர், ராமலிங்கம்... 54 வயதாகிறது.. ஆட்டோ டிரைவர்.. அந்த அந்த பகுதியில் உள்ள ஸ்கூல் பிள்ளைகளை காலை, மாலை ஆட்டோவில் ஏற்றி செல்வது வழக்கம்..
அப்படித்தான், வழக்கமாக தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளியிலிருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.. விஇ ரோட்டில் ஆட்டோ வந்தபோது ராமலிங்கத்துக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.. அதனால் அவரால் தொடர்ந்து ஆட்டோவை ஓட்ட முடியவில்லை.
நெஞ்சுவலி
அதனால் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு.. ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி உதவிக்கு வேறு ஆட்டோ வருகிறதா என்று பார்த்தார்.. அந்த நேரம் பார்த்து யாருமே வரவில்லை.. அதனால் திரும்பவும் அந்த ஆட்டோவை அவரே கஷ்டப்பட்டு ஓட்டிவந்தார்... கீழரத வீதி பகுதியில் வந்தபோது, நெஞ்சுவலி திரும்பவும் வந்து, அதிகமாகிவிட்டது.
ஆம்புலன்ஸ்
அப்போதும் ஆட்டோவை ஒரு ஓரமாகவே நிறுத்தினார்.. ஆனால், அவர் நிறுத்திய அடுத்த செகண்டே அந்த சீட்டிலேயே சரிந்து விழுந்தார்... ஆட்டோவில் இருந்த குழந்தைகள் அலறினர்.. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தனர்.. ராமலிங்கம் எழவில்லை.. அதனால், உடனடியாக ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.. ஆனால் டாக்டர்கள் ராமலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
உதவி
உயிர் பிரியும் கடைசி நேரத்திலும் பிள்ளைகளை பத்திரமாக காப்பாற்றி மறைந்துள்ளார் ராமலிங்கம்.. ரோட்டில் வழிமறித்து உதவி கேட்கும்போது, இவருக்கு நெஞ்சுவலி என்று யாருக்கும் தெரியாது.. வண்டியை நிறுத்துமாறு கையசைப்பதை பார்த்து கொண்டே, வேறு ஏதோ லிப்ட் கேட்கிறார் என நினைத்துள்ளனர் மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள்.. மேலும் அவர்கள் ஆட்டோக்களில் சவாரியும் இருந்துள்ளது.. அதனால்தான் சரியான நேரத்தில் இவருக்கு உதவி கிடைக்கவில்லை.
சாப்பிட்டீங்களா?
பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுவதைவிட, குழந்தைகள் இருக்கும்போது, மெதுவாகத்தான் ஓட்டுவராம்.. "சாப்பிட்டீங்களா? என்ன சாப்பிட்டீங்க?" என்று தினமும் குழந்தைகளை கேட்பாராம்.. பிள்ளைகளும் இவரிடம் "அங்கிள், அங்கிள்" என்று உரிமையாக, பாசமாகவே பழகி வந்துள்ளனர்... ராமலிங்கம் ஆட்டோ மாமாவின் இந்த பிரிவு அந்த பகுதி குழந்தைகள் உட்பட எல்லாரையுமே உலுக்கிவிட்டது!!