சாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பம்.. கிடைத்தது சிசிடிவி காட்சிகள்.. சிபிசிஐடி ஐஜி அறிவிப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் சில காட்சிகள் கிடைத்துள்ளதாக, சிபிசிஐடி, ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், வியாபாரிகளான, தந்தை மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் சித்திரவதை செய்யப்பட்டு அதன் காரணமாக மரணம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது தொடர்பாக அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், உள்பட 4 பேர்கள் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்!
அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள்
இந்த வழக்கை சிபிசிஐடி எடுத்து விசாரிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது முதல், வழக்கு வேகம் பிடித்து வருகிறது. சிபிசிஐடி ஐஜி, சங்கர், 12 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்து கொடுமைப் படுத்தப்பட்டது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினம் தினம் பதிவாக கூடிய காட்சிகள் அன்றைக்கே அழியக்கூடிய வகையில் சிசிடிவி செட் செய்யப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
இது விசாரணையில் பின்னடைவாக கருதப்பட்டாலும் கூட, தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு சிசிடிவியில் அழிக்கப்பட்ட காட்சிகளை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்றுவந்தது. இதுகுறித்து தூத்துக்குடியில் இன்று சிபிசிஐடி ஐஜி, சங்கர் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது விளக்கம் தெரிவித்தார்.
அரசியல் தலையீடு இல்லை
இந்த வழக்கில் அரசியல் அழுத்தங்கள் ஏதும் கிடையாது. தலையீடு இல்லாமல்தான் விசாரணை நடத்தி வருகிறோம். சிசிடிவியில் பதிவான சில காட்சிகள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கான்ஸ்டபிள் முத்துராஜ் தலைமறைவு
காவலர் முத்துராஜ் விரைவில் கைது செய்யப்படுவார். முத்துராஜ் பிடித்து வைக்கப்பட்டுள்ளார் என்பதெல்லாம் கற்பனையான கதைகள். அப்படியான தேவையே கிடையாது. அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார் .
முக்கிய திருப்பம்
சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஜெயராஜ் காவல்துறையினரால் கடையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட போது அமைதியாக நடந்து சென்ற காட்சிகள் சிசிடிவி யில் வெளியாகி இருந்தது. அதுவும் வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக பார்க்க படுகிறது.