ஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு
தூத்துக்குடி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது மத்திய பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிக்கையில் வாயிலாக கூறியிருந்தார்.
இந்தநிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி. அப்போது அவர் பேசுகையில்: சேலம் உருக்காலை விவகாரம் பொதுப் பிரச்சனை, இதில் பிற மாநிலங்களை போல் இணைந்து செயல்படுவோம். தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் தருவோம் என்றார்.
கோதாவரி - காவிரி இணைப்பிற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோலிய விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய இரண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.