தூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி
சென்னை: தூத்துக்குடியில் வேன்மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் பெரிய அளவில் நடந்தது 100வது நாள் போராட்டத்தின் போது தூத்தக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி தூத்துக்குடியில் பல ஆயிரம் மக்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாள் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் நிரந்தரமாக மூடப்பட்டது.
இந்நிலையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது முதல்வர் பழனிச்சாமி, சட்டசபையில் காவல்துறை தொடர்பான உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் காவல்துறையினருக்கு வீடுகள் கட்டும் திட்டத்தையும் அறிவித்தார்.
"சங்கீதா"வுக்காக காத்து கிடந்து ஏமாந்து போன கியூ... 2 குரூப்.. கடும் வாக்குவாதம்.. ஒரே பரபரப்பு
அப்போது விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி வண்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட போலீசுக்கு அனுமதி உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு குறுக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேன்மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று விளக்கம் அளித்தார்.