களை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்!
சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது
தூத்துக்குடி: "தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னன்" என்று அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் இன்று திறந்து வைத்தார்...
தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை உலகில் மங்கா புகழ் பெற்றவர் சிவந்தி ஆதித்தனர்... பத்திரிகை மட்டுமல்லாமல், கல்வி, விளையாட்டு, ஆன்மீகம், சமுதாய மேம்பாட்டு பணிகளுக்காக இவர் செய்துள்ள.. அர்ப்பணித்துள்ள சேவைகள் ஏராளம்.
இந்த பணிகளை தன் வாழ்நாளின் இறுதிவரை சிவந்தி ஆதித்தனார் கடைப்பிடித்து வந்தார். தன்னுடைய பணி, சேவைக்காக பல்வேறு பட்டங்கள், விருதுகள், பரிசுகளையும் இவர் பெற்று உள்ளார்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு 2008-ல் பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், தமிழக அரசும் கடந்த 2017-ல் திருச்செந்தூரில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே இதனை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பகிரங்கமாக அறிவித்தார.
இதையடுத்து மணிமண்டபம் கட்டும் பணிகளும் ஆயத்தமானது.. திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டது.. 2018, ஜூலை மாதம் 31-ந் தேதி அதறக்ன அரசாணையும் வெளியிடப்பட்டது.. அக்டோபர் மாதம் 26-ந் தேதி, மணிமண்டபம் கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட.. மணிமண்டபம் கட்டும் வேலைகள் துரிதமாயின.. முழு உருவச்சிலை, பூங்கா, நூலகம் என சகல வசதிகளுடன் கூடிய மணிமண்டபம் தயாரானது... சகல பணிகளும் முடிந்த நிலையில், இன்று அந்த மணிமண்டப திறப்பு விழாவும் நடந்தது.. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்த சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி தொலைக்காட்சி இயக்குநர் பா.ஆதவன் ஆதித்தன், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த நூலகத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். விழாவையொட்டி காலை முதலே மக்கள் திரண்டு வர ஆரம்பித்துவிட்டனர்.. இதனால் திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ்தாய் வாழ்த்துடன் மணிமண்டப விழா மிக சிறப்பாக நடந்தது