அனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்... டிஸ்யூம்... டிஸ்யூம்... பின்னணி என்ன..?
தூத்துக்குடி: திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் பனங்காட்டு மக்கள் கழகத் தலைவர் சுபாஷ் பண்ணையாருக்குமான மோதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டுபத்து என்ற கிராமத்தில் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் பேனர் வைக்க அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் பண்ணையார் தரப்பினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரை அடித்து நொறுக்கினர்.
குட்கா விவகாரம்: திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
2003-ல் என்கவுண்டர்
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி போலீஸாரால் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது முதலே பண்ணையார் கோஷ்டிக்கும் அனிதா தரப்பிற்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.
தண்டுபத்து கிராமம்
நாளை மறுதினம் வெங்கடேஷ் பண்ணையார் நினைவுநாள் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அவரது நினைவு நாள் பேனர் வைக்க சுபாஷ் பண்ணையார் தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் வெங்கடேஷ் பண்ணையார் உருவப்படம் தாங்கிய பேனர் வைக்க அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது வெங்கடேஷ் பண்ணையாரின் தம்பி சுபாஷ் பண்ணையாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடித்து நொறுக்கல்
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பொலிரோ வாகனத்தை சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கண் மூடித்தனமாக அடித்து நொறுக்கினர். அந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு எஸ்.பி.யிடம் புகார் அளித்த அனிதா தரப்பு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தி வருகிறது. மேலும், நாளை மறுதினம் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் என்பதால் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டுக்கும் அவருக்கு 12 போலீஸார் அடங்கிய குழுவை பாதுகாப்புக்கு நியமித்திருக்கிறார் எஸ்.பி. ஜெயக்குமார்.
திமுக எதிரியல்ல
இதனிடையே சுபாஷ் பண்ணையார் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அனிதா என்ற தனி மனிதரை தான் தாங்கள் எதிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஒன்றாக இருக்கும் அண்ணன் தம்பிகளை சிதறு தேங்காயை போல் சிறிது நேரத்தில் பிரித்தும் விடும் சூழ்ச்சி செய்பவர் அனிதா ராதாகிருஷ்ணன் என விமர்சித்துள்ளார். மேலும், திருச்செந்தூர் தொகுதியில் திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.
நினைவு நாள் அனுசரிப்பு
அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் தனது அண்ணன் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்தி தீருவோம் என்றும் முடிந்தால் பனங்காட்டு மக்கள் கழகத்தை தடுத்துப் பார் எனவும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சுபாஷ் பண்ணையார் சவால் விடுத்திருக்கிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதோடு நிலைமையை சகஜமாக்க தன்னால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.