சரியான பிளான்.. இன்னும் ஒரே ஒருவர்தான்.. கொரோனா இல்லாத மாவட்டமாகும் தூத்துக்குடி.. எப்படி சாதித்தது?
தூத்துக்குடியில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது, மற்ற எல்லோரும் வெறும் 2 வாரத்தில் குணமடைந்து உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது, மற்ற எல்லோரும் வெறும் 2 வாரத்தில் குணமடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தீவிரம் குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் மட்டும்தான் நாளுக்கு நாள் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா வேகம் குறைய தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. அதிகமாக சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2 போலீசாருக்கு கொரோனா.. சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்!
எத்தனை பேர் குணம்
தமிழகத்தில் நேற்று மட்டும் 81 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே ஆகும். ஈரோட்டில் கொரோனா வந்த எல்லோரும் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதனால் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
தூத்துக்குடி எப்படி
ஏற்கனவே கிருஷ்ணகிரியில் கொரோனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி லிஸ்டில் தூத்துகுடியும் இணையும் நிலையில் உள்ளது. தூத்துக்குடியில் 18 நாட்களுக்கு முன்புதான் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது. பின் கொஞ்சம் கொஞ்சமாக வரிசையாக பலருக்கு கொரோனா பரவ தொடங்கியது. அடுத்தடுத்து பலருக்கு அங்கு கொரோனா பரவியது.
எத்தனை பேருக்கு பரவியது
இந்த நிலையில் இரண்டு வாரத்தில் அங்கு 27 பேருக்கு கொரோனா பரவியது. வேகமாக அங்கு இப்படி பலருக்கு கொரோன பரவியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் கொரோனா பாதித்த பெண் ஒருவர் அங்கு பலியானதும் பெரிய அதிர்ச்சி அளித்தது. இதனால் தூத்துக்குடியில் பெரிய அளவில் கொரோனா பரவி தீவிரம் எடுக்குமோ என்று அச்சம் ஏற்பட்டது.
ஆனால் அதன்பின் என்ன நடந்தது
ஆனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் மற்றும் அந்த தொகுதி எம்எல்ஏ உட்பட எல்லோரும் இதற்காக சேர்ந்து ஒன்றாக பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். வேகமாக பணிகளை செய்ய தொடங்கினார்கள். இதற்கான குழுக்களை அமைத்து திட்டங்களை வகுத்தனர். முதலில் தூத்துக்குடி முழுக்க கடுமையான ஊரடங்கை கொண்டு வந்தனர். மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தினர். இதனால் எல்லோருக்கும் வீடு வீடாக அத்தியாவசிய பொருட்களை அனுப்பினார்கள்.
செமயான பிளான்
தூத்துக்குடியில் கொரோனாவை கட்டுப்படுத்த மொத்தம் 4 விதமான பிளான்களை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி வெளிநாடு, வெளியூர் சென்று வந்தவர்களை தனிமைப்படுத்துவது. அறிகுறி உள்ளவர்களுக்கு உடனே கொரோனா சோதனை செய்வது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிப்பது என்று மூன்று பிளான்களை கடுமையாக செய்தனர். இதில் நான்காவது பிளான்தான் தூத்துக்குடிக்கு பெரிய அளவில் பலன் அளித்தது.
நான்காவது பிளான் என்ன
நான்காவதாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்று சல்லடை போட்டு தேடி உள்ளனர். ஒருவர் விடாமல் எல்லோரையும் காண்டாக்ட் டிரேஸ் மூலம் கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள் எல்லோரையும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து மேலும் கொரோனா பரவாமல் தடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடியில் ஐந்து அடுக்கு காண்டாக்ட் டிரேஸ் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.
மக்கள் வெளியே வரவில்லை
இன்னொரு பக்கம் மக்கள் யாரும் வெளியே வர கூடாது என்பதில் அம்மாவட்ட நிர்வாகம் மிகவும் உறுதியாக இருந்தது. இதனால் அவர்கள் அவர்கள் வீட்டிற்கே மாநகராட்சி பகுதியில் கொண்டு கொடுக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வருவது மொத்தமாக குறைக்கப்பட்டது. இதனால் ஒரு பக்கம் அங்கு கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்.இன்னொரு பக்கம் புதிய நபர்களுக்கு கொரோனா ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
எத்தனை பேர் குணப்படுத்தப்பட்டனர்
இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட 27 பேரில் ஒருவர் பலியானார். 26 பேரில் நேற்று வரை 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குணமடைந்தனர். இன்று 3 பேர் குணமடைந்தனர். இதனால் இன்னும் ஒருவர் மட்டுமே தூத்துக்குடியில் கொரோனா பாதிப்போடு இருக்கிறார்கள். அவரும் வேகமாக உடல் முன்னேறி வருவதால், மொத்தமாக அங்கு இந்த வாரத்தில் கொரோனா முழுமையாக குணப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.