தூத்துக்குடி மக்களே.. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. கலெக்டர் வார்னிங்
தூத்துக்குடி: வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
புரேவி புயல் பாம்பன் அருகே இன்று மாலை நிலை கொண்டு இருந்த நிலையில், காற்று மற்றும் மழை, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல், நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட காலத்திற்குள், இந்த புயல், பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்து அரபிக் கடலுக்கு பயணிக்க உள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் மழை மற்றும் காற்று மிக அதிகமாக இருக்கும்.
மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தூத்துக்குடி மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கடற்கரை போன்ற நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கும் செல்ல கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாளை புயல் கரையை கடக்கும் வரை இந்த நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.