ஊராட்சி தலைவர் பதவி தலித் சமூகத்திற்கா.. அப்போ ஓட்டு கிடையாது.. ஊரே எடுத்த முடிவு.. உடன்குடி பக்கம்!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி தலித் ஜாதிப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, பிற ஜாதியை சேர்ந்த அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து வாக்களிப்பை புறக்கணித்தனர். இதனால், வெறும் 6 ஓட்டுகள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடன்குடி அருகே உள்ள பிச்சிவிளை கிராம ஊராட்சியில் பெருவாரியான கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர். இங்கு மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 785.
ஊராட்சி தலைவர் பதவி சுழற்சி முறையில் இந்த முறை தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றன. எனவே ஊராட்சியில் சிறுபான்மையினராக உள்ள தலித் தலைவரா? என்ற பிரச்சாரம் பிற மக்களிடையே எழுந்தது.
ஏற்கனவே, இப்பகுதியிலுள்ள பிற ஜாதியினருக்கும், அருகேயுள்ள ஊர்களை சேர்ந்த தலித் சமூகத்தினருக்கும் அவ்வப்போது உரசல்களும் இருந்து வந்த நிலையில், இந்த பிரச்சினை இன்னும் பூதாகரமாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊராட்சியில் உள்ள ஆறு வருடங்களுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு தங்கள் ஊர்களில் கருப்புக் கொடிகளை கட்டி உள்ளனர்.
இன்று பிச்சிவிளை ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஆறு வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி என்ற இரு தலித் பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தமே 6 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற ஜாதி பொதுமக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், மக்கள் அதை ஏற்கவில்லை.