ஜனநாயகம் இறந்துவிட்டது.. நாட்டின் நலனில் பிரதமர் சமரசம் - ராகுல் காரசார விமர்சனம்
தூத்துக்குடி: பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக இன்று அவர் தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் பேசிய ராகுல் காந்தி, 'நமது பிரதமர் இந்தியாவின் நலன்களை சமரசம் செய்வார் என சீனாவுக்குத் தெரியும்' என்றார்.
மேலும், "நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டது . அது மெல்ல மெல்ல இறந்துவிட்டது. பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை போன்றவை தேசத்தை ஒன்றிணைக்கின்றன. இந்த சமநிலையில் தான் ஒரு நாடு இயங்குகிறது. அந்த சமநிலை அழிக்கப்பட்டால், தேசம் அழிக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அவற்றில் ஊடுருவியுள்ளது" என்று ராகுல் காந்தி கூறினார்.
என்னை அச்சுறுத்த முடியாது.. நாம் இருவர் நமக்கு இருவர் என 4 பேர் ஆட்சி செய்கின்றனர்.. ராகுல் அட்டாக்
மேலும், நீங்கள் பிரதமர் மோடி பயனற்றவராக இருக்கிறார் என்று கூறினீர்கள். நான் அதில் சிறு திருத்தம் செய்கிறேன். நான் விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்றால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்நாட்டில் இருவருக்கு ( அம்பானி, அதானி) உதவியாக இருக்கிறார். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையில் அவர் உதவியாக இருக்கிறார்" என்று கூறினார்.