என்னை அச்சுறுத்த முடியாது.. நாம் இருவர் நமக்கு இருவர் என 4 பேர் ஆட்சி செய்கின்றனர்.. ராகுல் அட்டாக்
தூத்துக்குடி: என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை.. என்னை பாஜகவால் சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை வைத்து அச்சுறுத்த முடியாது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 2-வது கட்டமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுடன் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடினார். அப்போது வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:
விலை பேசும் பாஜக
காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்குகிறது பாஜக. எம்.எல்.ஏக்களை அதிகார பலம், பண பலத்தால் கட்சி மாற வைக்கிறது பாஜக. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. ஆனால் எதிர்க்கட்சிகளை நிதி திரட்ட அனுமதிப்பது இல்லை பாஜக.
ஊடகங்களுக்கு அச்சுறுத்தல்
நாட்டின் அரசியல் சாசனப்படியான அமைப்புகள் அனைத்தையும் பாஜக சீரழித்து வருகிறது. அரசியல் சாசன அமைப்புகளின் சமநிலையை ஆர்.எஸ்.எஸ். அழித்துவிட்டது. ஊடகங்கள் உண்மையை எழுதவிடாமல் அச்சுறுத்துகிறது பாஜக. நீதித்துறையையும் பாஜக சீரழித்துவிட்டது.
பெரிய சவால்
அரசியல் சாசன அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கிறது பாஜக. ஜனநாயகம் இந்த நாட்டில் செத்துவிட்டது. இது மிகப் பெரிய சவாலாகும். பாஜகவின் இந்த போக்கை அனைவரும் தடுத்தாக வேண்டும்.
LIVE: Shri Rahul Gandhi interacts with Advocates at VOC College, Thoothukudi, Tamil Nadu, #RahulAnnavinTamilvannakkam https://t.co/YCAQFRjdMW
— Youth Congress (@IYC) February 27, 2021
என்னை மிரட்ட முடியாது
என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. என்னை யாரும் அச்சுறுத்த முடியாது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை மூலம் பாஜகவால் என்னை அச்சுறுத்தவெல்லாம் முடியாது.
4 பேர்தான் நாட்டை ஆள்கின்றனர்
நாம் இருவர் நமக்கு இருவர் என நாட்டை 4 பேர் மட்டுமே ஆட்சி செய்கின்றனர். 2 பேர் 2 பேருக்காக நினைப்பதுதான் நாட்டில் அரசாக இருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் நிலைப்பாடு. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை முழுமையாக ஆதரிக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.