வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார் செந்தில் பாலாஜி... அதிமுக புகார்
அரவக்குறிச்சி: தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அங்கு 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்காளர்களை அடைத்து வைத்து வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது என்றும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் தெரிவித்திருந்தார். மேலும், மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடக்கின்றனர் என்றும் கூறினார்.
முதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்... அன்புமணி கடும் விமர்சனம்
இதனிடையே, அரவக்குறிச்சியில் 174 வது வாக்கு சாவடியில் கூட்டமாக இருந்த வாக்காளர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதில் இருபெண்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.