கட்சி மாறிய சீனியர்.. கலக்கத்தில் தூத்துக்குடி திமுக.. கனிமொழி தொகுதியிலே இப்படி ஒரு நிலையா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக கூடாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. கனிமொழி எம்.பியாக இருக்க கூடிய ஒரு தொகுதியிலா இப்படி என்றால், அனைவர் கைகளும் கீதா ஜீவனை நோக்கி நீள்கின்றன.
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனும், வடக்கு மாவட்டச் செயலாளராக கீதாஜூவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி திமுகவில் தான் மறையும் வரை கோலோச்சிய, பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். 2006-11 வரையிலான கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் கீதா ஜீவன். தற்போது தூத்துக்குடி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்
சவால்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எப்போதுமே திமுகவுக்கு சவாலான இடம்தான். அதிலும், இந்த மண்டலத்தில் அடங்கியுள்ள, விளாத்திகுளம் சொல்லவே வேண்டாம். விளாத்திகுளத்தில், இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் அதிமுக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமா, சமீபத்தில் லோக்சபா தேர்தலோடு, இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் விளாத்திகுளமும் ஒன்று. ஆனால் மாநிலம் முழுக்க திமுக அலை வீசியபோதும், விளாத்திகுளத்தில் அதிமுக வென்றது.
ஓட்டு சிதறியும் திமுக வெல்லவில்லை
அதிமுக வேட்பாளராக எம்.எல்.ஏ சின்னப்பனும், அமமுக சார்பில் ஜோதிமணியும், அதிமுகவில் சீட் கிடைக்காததால், கோபித்துக் கொண்டு, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். அப்படியானால் அதிமுகவின் ஓட்டுக்கள் 3 பக்கம் சிதறியிருக்கும்தானே. அப்படியும் வென்றது அதிமுக வேட்பாளர்தான். இவ்வளவுதான் விளாத்திகுளத்தில் திமுகவின் பலம்.
திமுகவில் இணைந்த சீனியர்
இந்த நிலையில்தான் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்.கே.பெருமாள். ஆனால், தனது ஆதரவாளர்கள் படையோடு இப்போது அவர் அதிமுகவில் இணைந்துவிட்டார். இவர் 2001 முதல் 2006 வரை இதே தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக பணியாற்றியவர். அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியவர். எனவே அதிமுகவுக்கு மேலும் இது பலத்தை கொடுத்துள்ளது. திமுகவுக்கு இன்னும் சரிவை கொடுத்துள்ளது.
|
கீதா ஜீவன்
விளாத்திகுளம் போன்ற சவாலான பகுதியில் தன்னை 'கோர்த்துவிட்டுவிட்டதாக' கோபித்துக் கொண்டு, என்.கே.பெருமாள் அதிமுகவுக்கே போய்விட்டதாக கூறப்படுகிறது. விளாத்திகுளம் இடைத் தேர்தலில், கீதாஜீவன் கட்சிக்காக இறங்கி வேலை பார்க்கவில்லலை, பணத்தை செலவிடவில்லை என்பது போன்ற முனுமுனுப்புகளையும் கேட்க முடிகிறது.
தூத்துக்குடி நிலைமை
தூத்துக்குடி லோக்சபா தொகுதியிலல் கனிமொழி போட்டியிட்டபோது, விளாத்திகுளம் தொகுதியில் 70,039 வாக்குகள் கிடைத்தது. ஆனால், விளாத்திகுளம் இடைத் தேர்தலில், அதாவது, லோக்சபா தேர்தல் நடைபெற்ற அதே நேரத்தில் நடந்த அந்த தேர்தலில், திமுக எம்எல்ஏ வேட்பாளரான ஜெயக்குமாருக்கு, கனிமொழி பெற்றதில், சுமார், பாதி ஓட்டுக்கள்தான் கிடைத்தன. இது கீதா ஜீவனின் ஃபெய்லியர் என்கிறது திமுக வட்டாரம்.
தொகுதியிலுள்ள சீனியர்களை கீதா ஜீவன் அனுசரித்து, போகாவிட்டால், தூத்துக்குடியில் சரிவை தடுக்க முடியாது என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.