ஹிட்டாச்சி மெஷின் வாங்கி கொடுத்த அண்ணாச்சி... மகிழ்ச்சியில் மணப்பாடு மீனவ மக்கள்..!
தூத்துக்குடி: மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடையாக திகழும் மணல்திட்டுக்களை தூர்வாருவதற்காக மணப்பாடு மீனவ கிராமத்திற்கு ஹிட்டாச்சி மெஷின் ஒன்றை சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்துள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் அடிக்கடி மணல்திட்டுக்கள் உருவாவதால் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதி மீனவர்கள் தவித்து வந்துள்ளனர்.
வாரம் ஒரு முறையாவது அந்த மணல் திட்டுக்களை தூர்வார வேண்டி இருந்ததால் மீனவர்கள் கூட்டு சேர்ந்து பணம் போட்டு வாடகைக்கு இயந்திரம் எடுத்து தூர் வாரி வந்திருக்கின்றனர். மணப்பாடு மீனவ கிராமத்திற்கு நிரந்தரமாக தூர்வாரும் இயந்திரம் ஒன்றை வழங்குமாறு மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அப்படி தனி ஒரு கிராமத்திற்கு மட்டும் இயந்திரம் வாங்கிக் கொடுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரத்தை தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி கவனத்திற்கு மணப்பாடு மீனவ மக்கள் கொண்டு சென்றனர். அவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணனுடன் சென்று மணப்பாடு மணல்திட்டுக்களை ஆய்வு செய்தார்.
ஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
இதையடுத்து அந்த ஆய்வு முடிந்த ஒரு மாதத்திற்குள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தமது சொந்த நிதியில் இருந்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள புதிய ஹிட்டாச்சி மெஷின் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்கு ஓட்டுநரும் நியமித்து தாமே ஊதியமும் கொடுத்துக் கொள்கிறார்.
இதுவரை வாரம் ஒரு முறை தூர்வாரும் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து மணல்திட்டை சீரமைத்து வந்த மீனவர்களுக்கு இப்போது சொந்தமாக தூர்வாரும் இயந்திரம் கிடைத்துவிட்டதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.