அடுத்தடுத்து உயிரிழக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?
Recommended Video
தூத்துக்குடி: திமுகவின் முக்கிய பிரமுகரும், மூத்த பிரமுகரும், எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவது தூத்துக்குடி திமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக பெரியசாமி இருந்தபோதே அதற்கு இணையாக பல செயல்பாடுகளை புரிந்து கட்சியின் கவனத்தை ஈர்த்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த பதவியை பெறுவதற்கு 2 பேருக்குமே அப்போது நிறைய போட்டி இருந்தது.
கடைசிவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்த பெரியசாமி மறைந்தபிறகுதான், தெற்கு மாவட்டசெயலாளர் பொறுப்பு இவர் கைக்கு வந்து சேர்ந்தது. தூத்துக்குடியை பொறுத்தவரை கட்சிக்கு இவர் பலம் என்றாலும், இவரது ஆதரவாளர்களால் பெரிய களங்கமும் வந்து கொண்டுள்ளதை மறுக்க முடியாது.
படிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரன்
பில்லா ஜெகன்
இப்படிதான் சில மாதங்களுக்கு முன்பு சிம்சன் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இவர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் ஆவார். பில்லா ஜெகன் என்பவர் சொத்துக்காக சொந்த தம்பியையே இவர் சுட்டுக் கொன்று கைதானவர். அனிதாவின் ஆதரவாளர் என்றாலும் அண்ணன்-தம்பி என இவர்கள் மீது ஏற்கெனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
கருணாகரன்
இந்நிலையில்தான், கருணாகரன் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். இவரும் அனிதாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். விவசாயி.. பைனான்ஸ் தொழிலும் செய்தார்... மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக குழாய்களை பதிக்கும் பணியில் விவசாயிகளுக்கு எதிராக கருணாகரன் செயல்பட்டதாக தெரிகிறது. இதனால் விவசாயிகளுடன் அடிக்கடி மோதலும் இருந்து வந்துள்ளது.
வெட்டி கொலை
தன்னுடைய அப்பாவின் சமாதிக்கு சென்ற கருணாகரனை, மர்ம கும்பல் வழிமறித்து ஓட ஓட விரட்டி சென்று வெட்டி சாய்த்து தப்பி உள்ளது. ஒட்டபிடாரம் இடைத்தேர்தல் பணிகளை அனிதாவுடன் சேர்ந்து கருணாகரன் மேற்கொண்டார். ஆனால் அப்போது ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால், அனிதாராதாகிருஷ்ணனிடம் இருந்து விலகி தனித்து இயங்கியதாக கூறப்படுகின்றது.
சண்முகையா
மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பானவற்றை கருணாகரன் கவனித்து வந்ததாகவும் இதில், சில பிரச்னைகள் எழுந்ததால் இவரை அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, கருணாகரனும் அனிதா ராதாகிருஷ்ணனை விட்டுவிலகி, தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவான சண்முகையாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வந்துள்ளார்.
தீவிர விசாரணை
தொழில் தகராறு, அரசியல் தகராறு, கோயில் விழா எடுத்த தகராறு.. இப்படி பல பிரச்சனைகளில் கருணாகரன் சிக்கி உள்ளார். எந்த விவகாரத்தில் இவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை போலீசார்தான் வெளிக் கொணர வேண்டும். ஆனால் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டு வருவதும், சர்ச்சைக்கு உள்ளாவதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.