களத்தில் இறங்கிய கனிமொழி... தூத்துக்குடியில் முகாமிட்டு நடவடிக்கை
தூத்துக்குடி: திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடியில் முகாமிட்டு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 3 நாட்களாக இதற்காக தூத்துக்குடியில் முகாமிட்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அவருக்கு உதவியாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும், அவருடைய தம்பி ஜெகனும் தொகுதி முழுவதும் உடன் செல்கின்றனர்.
தண்ணீர் தேங்கியது
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவது பற்றி சென்னையில் இருந்த கனிமொழி எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
3 நாட்களாக முகாம்
இதையடுத்து சென்னையிலிருந்து சொந்தத் தொகுதியான தூத்துக்குடிக்கு வந்த கனிமொழி எம்.பி. அங்கு 3 நாட்களாக முகாமிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டார். மேலும், சில இடங்களில் தேங்கி நின்ற மழை நீரில் சென்று பொதுமக்களை சந்தித்து சீரமைப்பு பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
நேரில் ஆய்வு
தூத்துக்குடி மீளவிட்டான் சாலை, வி.எம்.எஸ்.நகர்., சின்ன கன்னுபுரம், ஆலந்தலை, தருவைக்குளம், ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு செய்த கனிமொழி, தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டு நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்தார்.
எளிமை
இதனிடையே தூத்துக்குடி வெற்றிவேல் நகரில் கனிமொழி ஆய்வு செய்ய சென்ற போது, அவரது கார் குறிப்பிட்ட பகுதிக்கு மேலே செல்ல முடியாதபடி பாதை குறுகலாக இருந்தது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய கனிமொழி சற்றும் யோசிக்காமல் தேங்கி நின்ற தண்ணீரில் நடக்கத் தொடங்கினார்.