தேர்தல் முடியட்டும்.. ரெண்டா உடையப் போகுது.. என்ன இப்படிச் சொல்லிட்டார் ராஜேந்திர பாலாஜி!
தூத்துக்குடி: வருகிற 23-ம் தேதிக்கு பிறகு, திமுக இரண்டாக உடைய போகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் பகுதியில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீதிவீதியாக சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23-ம் தேதி 11 மணிக்கு பிறகு, வாக்கு எண்ணிக்கை முடிவு வரும்போது, அதிமுக முன்னிலை, முன்னிலை என்ற தகவல் வரும் என்று கூறினார்.
4 தொகுதிகளில் டெபாசிட் வாங்கவே மற்ற கட்சிகள் போராடி வருவதாகவும், ஸ்டாலினும், டிடிவி தினகரனும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.
ஒரு கண்ணில் வெண்ணெய்.. இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.. பாஜகவின் பாரபட்சம்!
மேலும், அண்ணா- கருணாநிதி காலத்தில் இருந்தவர்கள் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள், ஒரு அணியாகவும், திமுக இரண்டாக உடைய போகிறது என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.
முன்னதாக, 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நமது வேட்பாளர் மோகனை வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் எடப்பாடியாரின் எக்கு கோட்டையாக உள்ளது என்றார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்க்க எதிரிகள் ஒருபுறம், துரோகிகள் மறு புறம் கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர். கிராமங்கள் தோறும் எடப்பாடி பழனிசாமி அலைதான் வீசுவதாக பேசினார்.