"வெறும் வாரிசு அரசியல்! திமுகவில் உதயநிதி மட்டுமில்லை! அவருக்கு அடுத்தும் கூட!" கடம்பூர் ராஜூ தாக்கு
தூத்துக்குடி: மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜூ, திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்த வந்தவர்கள் தங்களை அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. பதவி பெற்ற மந்திரிகளின் மகன்கள்!
கடம்பூர் ராஜூ
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியைச் சேர்ந்த பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலம் காலமாக உள்ளதுதான். அதேநேரம் அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவில் உண்மையாக உழைக்கும் எந்தவொரு தொண்டரும் தலைமை பொறுப்பிற்கு வரமுடியும். இது நிரூபிக்கப்பட்ட ஒன்று தான். இதன் காரணமாகவே எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த அதிமுக இப்போது பொன்விழாவைக் கடந்த 51ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
வாரிசு அரசியல்
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி ஜெயலலிதாவைத் தேர்ந்து எடுத்தனர். அப்போதும் கூட அதிமுக இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. இருப்பினும், ஒரு கட்டத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே இருக்கும் அடிப்படை வேறுபாடே வாரிசு அரசியல் தான். திமுகவில் இருப்பதைப் போன்ற வாரிசு அரசியல் அதிமுகவில் கிடையாது. வாரிசு அரசியலை எதிர்த்து உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக.
உதயநிதி
ஆனால், திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே இருக்கிறது. இதுதான் காலத்தின் கட்டாயம். திமுகவில் உதயநிதிக்கு அடுத்த வாரிசு வந்தால் கூட அவர்தான் தலைமை தாங்க முடியும். வேறு யாராலும் தலைமைக்கு வர முடியாது. திமுகவில் இன்றைய முன்னணி தலைவர்களும் கூட அவரது தலைமையைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. இது தான் காலத்தின் கட்டாயம். திமுகவில் இப்படியொரு அரசியல் தான் நிலவுகிறது. திமுகவினரைக் கண்டு முதல்வர் ஸ்டாலினே பயப்படும் நிலை தான் உள்ளது.
பாஜக கூட்டணி
பாஜகவோடு பயணித்தவர்கள் தான் திமுகவினர்.. இன்று என்னமோ பாஜகவைத் தீண்டத்தகாதவர்கள் போல் பேசி வருகின்றனர்.. அனைத்து விவகாரங்களிலும் திமுக எப்பொழுதும் இரட்டை நிலைப்பாட்டைத் தான் கொண்டு இருந்து உள்ளது. பாஜக உடன் கூட்டணியில் இருந்தாலும் கூட நாங்கள் கொள்கையில் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்வதில்லை.. இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட எந்தவொரு கொள்கையிலும் பின்வாங்க மாட்டோம். பாஜக உடனான கூட்டணி என்பது வேறு.. அதிமுக கொள்கை வேறு.
ஓபிஎஸ்
எம்ஜிஆர் அதிமுகவுக்குத் தந்த வெற்றிச் சின்னம் இரட்டை இலை சின்னம்.. அது எங்களிடம் தான் உள்ளது அதை நாங்கள் ஏன் விட வேண்டும். தினகரன் பொறாமையில் பேசுகிறார்.. அதிமுக கட்சி சிதறவில்லை.. இன்னும் கூட அதிமுக கட்டுக்கோப்பாகத் தான் இருக்கிறது. கழக அமைப்பு தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்துள்ளனர். கட்சியில் எப்பொழுதும் பிளவு இல்லை.. கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸை எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்
விரைவில் இறுதி முடிவு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நல்ல முடிவு வரும்.. ஓபிஎஸ் கட்சியை விட்டு வெளியேற பின், அதிமுகவில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. பொன்விழா கூட்டங்களைக் கூட வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.. எனவே கட்சியே பிளவுபட்டு உள்ளதாகக் கூறுவதில் உண்மை இல்லை. ஓபிஎஸ் நியமிக்கும் பொறுப்புகள் எல்லாம் செல்லாத ஒன்று. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின் இவை எல்லாம் முடிவுக்கு வரும்.
முடக்கும் நடவடிக்கை
திமுக ஆட்சியில் எந்தத் துறையிலும் ஆக்கப்பூர்வ பணிகள் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கவே அவர்கள் முயல்கின்றனர். அதைத் தடுக்கவே நாங்கள் போராடுகிறோம். சொந்த அமைச்சர்களைக் கண்டே ஸ்டாலின் பயப்படுகிறார். இதை ஏதோ நாங்கள் சொல்லவில்லை. திமுக பொதுக்குழுவில் அவரே தான் பேசியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்கள், நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் அடாவடித்தனமாக வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். வளர்ச்சி பணிகள் இல்லை.. மாறாக வியாபாரத்தில் முதலீடு செய்துவிட்டுத் திரும்பி எடுப்பது போலவே அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.