கோவில்பட்டியில் பயங்கரம்.. சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து.. கட்டிடமே பற்றி எரிந்தது!
கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது
Recommended Video
கோவில்பட்டி: கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் ஷோரூமில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஜவுளிகள் துணிகள், ரெடிமேட் துணிகள் என மொத்தமாக தீயில் எரிந்து கருகின. ஷோரூம் கட்டிடமே தீப்பிடித்து எரிந்ததால், அந்த பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
கோவில்பட்டி பஸ் ஸ்டேண்ட் அருகே சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை உள்ளது. இந்த ஷோரூமில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. கட்டிடத்தின் 3-வது மாடியில் திடீரென புகை வர ஆரம்பித்தது. இதையடுத்து, முதல், 2-ம் தளங்களில் தீ, மளமளவென பரவி மொத்தமாகவே தீப்பிடித்து எரிந்தது.
விடிகாலை நேரம் என்பதால், கடைக்கு வெளியே செக்யூரிட்டிகள்தான் இருந்தனர். அதனால், உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திறகு போன் செய்யவும், வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வண்டி மட்டும் முதலில் வந்ததால், தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனால், விளாத்திகுளம், கழுகுமலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகள் வரவழைக்கப்பட்டது. அதன்பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் போராடி கொண்டு வந்தனர். ஆனாலும் கட்டிடம் முழுசுமாக எரிய தொடங்கிவிட்டது.
எப்படியும் இந்த ஷோரூமில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து கருகியதாக சொல்லப்படுகிறது. இதை தவிர கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஷோரூம் பகுதி முழுக்க சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கரும்புகையாக காட்சியளித்தது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.