தூத்துக்குடியில் களைகட்டிய பொங்கல் விழா... குலவையிட்டு, பொங்கலிட்டு வெளிநாட்டினர் மகிழ்ச்சி
தூத்துக்குடி: பொங்கல் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடியில் வெளிநாட்டினர் பொங்கல் வைத்து உற்சாகத்துடன் நடனமாடி கொண்டாடினர்.
இந்திய - தமிழக கலாச்சாரத்தினை தெரிந்துகொள்ள சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 27 பெண்கள் உட்பட 80 வெளிநாட்டினர் பொங்கல் விழாவில் பங்கேற்றனர். அப்போது, பாரம்பரிய நடனமாடி பொங்கலிட்டனர். பின்னர், பொங்கலை ருசித்து சாப்பிட்டனர்.
புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி அடுத்துள்ள சாயர்புரம் கிராமத்திற்கு வந்த வெளிநாட்டினரை கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து விவசாய நிலத்தில், கதர் வேட்டி, கைத்தறி புடவை அணிந்து புதுப்பானையில், பொங்கலிட்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
பொங்கல் பொங்கிய போது, வெளிநாட்டினர் அனைவரும் பொங்கலோ... பொங்கல் என குலவையிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். விறகு அடுப்பில் பொங்கல் வைத்து தமிழக மக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியது தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் அவர்கள் அங்கிருந்து நாளை தங்களின் நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல உள்ளதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.