மீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்!
மீண்டும் ஒரு ஆணவ கொலை தூத்துக்குடியில் நடந்துள்ளது
Recommended Video
தூத்துக்குடி: திரும்பவும் ஒரு ஆணவ கொலை நடந்துள்ளது.. பெண்ணின் கழுத்து, கைகள் என கண்மூடித்தனமாக வெட்டி போட்டுள்ளார்கள் பெண் வீட்டு தரப்பினரே! இது தூத்துக்குடி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விளாத்திகுளம் அருகே உள்ள கிராமம் குளத்தூர். இங்கு வசித்து வரும் சோலைராஜா என்பவர், வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பேச்சியம்மாளை காதலித்து உள்ளார். சோலைராஜாவுக்கு வயசு 24, ஜோதிக்கு வயசு 21. ரொம்ப வருடங்களாகவே இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆத்திரம்
எப்படியும் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் 2 மாசத்துக்கு முன்பு கல்யாணமும் செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டில் அதிக ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பின்பு பெரியார்நகரில் வசித்து வந்தனர். சோலைராஜ் மட்டும் கூலிவேலைக்கு சென்றுவந்த நிலையில், ஜோதி வீட்டில் இருந்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்றிரவு சோலைராஜ், பேச்சியம்மாள் இருவரும் காற்றுக்காக வெளியில் படுத்து தூங்கி உள்ளனர். விடிகாலை 3 மணியளவில், மர்ம கும்பல் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருமே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல் பரவியதுமே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட துவங்கியதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவலை
இந்த இரட்டை கொலை சம்பவத்தால் விளாத்திகுளம் பகுதியே ஆடிக்கிடக்கிறது என்றாலும், ஆணவ கொலையினால் இப்படியே அநியாயமாக உயிர்கள் பறிபோவது தமிழக மக்களையே கவலையில் ஆழத்தி உள்ளது.
போராட்டம்
சோலைராஜின் உறவினர்கள் குற்றவாளிகளான பெண்ணின் உறவினர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள்தான் இந்த படுகொலைக்கு காரணம் என்றும் சொல்லி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை கைது செய்யும் வரை இரண்டு பேரின் உடல்களையும் வாங்கமாட்டோம் என்று தூத்துக்குடி ஆஸ்பத்திரி முன்பாக போராட்டம் நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.