உவ்வே.. நாய் தின்ற 'ஷவர்மா'.. அப்படியே வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஓட்டல் - தூத்துக்குடியில் பரபரப்பு
சில தினங்களுக்கு முன்பு ஷவர்மா இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை அங்கிருந்த தெரு நாய் ஒன்று சாப்பிட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாலையோரம் வைத்துத் தயாரிக்கப்பட்ட சிக்கன் ஷவர்மாவை தெரு நாய் ஒன்று தின்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியான போதிலும், நாய் வாய் வைத்த அந்த ஷவர்மாவை ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டலை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இழுத்துப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
இந்தி படித்தால் வேலையா? 2 கோடி பேர் ஓட்டலில் மேஜை தான் துடைக்கிறாங்க.. பங்கமாய் கலாய்த்த சீமான்
ஷவர்மா கொடுத்த பீதி
துருக்கி நாட்டு உணவான சிக்கன், மட்டன், பீப் ஷவர்மாக்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு இருந்து வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த ஷவர்மா மோகம் இருந்தது. குறிப்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஷவர்மா விற்பனை சக்கை போடு போட்டு வந்தது. இந்த சூழலில்தான், கடந்த ஆண்டு கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் திடீரென மரணம் அடைந்தார். பரிசோதனையில், கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்டதே அவரது மரணத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஷவர்மா மீதே மக்களுக்கு ஒருவித பயம் உண்டானது. இதனால் நாடு முழுவதுமே ஷவர்மா விற்பனை பெருமளவில் சரிந்தது.
நாய் தின்ற ஷவர்மா..
இந்நிலையில், தூத்துக்குடியில் ஷவர்மாவை வைத்து ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் 'சமுத்ரா' என்ற பெயரில் பிரபல அசைவ ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் முன்புறம் உள்ள பிளாட்பார்மில் சிக்கன் ஷவர்மா செய்யப்படுவது வழக்கம். இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அவ்வாறு ஷவர்மா இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை அங்கிருந்த தெரு நாய் ஒன்று சாப்பிட்டது.
வாடிக்கையாளர்களுக்கு விற்பனை
இதைச் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோவும் படு வேகமாக இணையத்தில் பரவியது. ஆனால், அந்த ஓட்டல் நிர்வாகமோ இப்படியொரு சம்பவம் நடந்ததையே மறைத்து, ஜொமோட்டோ, ஸ்விகி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலமாக ஷவர்மாவை விற்று வந்தது. அந்த நாய் வாய் வைத்த ஷவர்மாவையும் வாடிக்கையாளர்களுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
இழுத்து மூடி 'சீல்'
இந்நிலையில், இந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட பலரும், நாய் சாப்பிடும் வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். நாம் சாப்பிட்ட ஷவர்மாவில் தான் நாய் வாய் வைத்திருக்குமோ என்ற அருவருப்பும், பயமும் அவர்களுக்கு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து உணவு பாதுகாப்பத் துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டலையும், வீடியோவையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த ஓட்டலில் பாதுகாப்பற்ற முறையில் உணவுகள் செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஓட்டலை அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்தனர்.