கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர்.. எங்கள் பலம் இனிமேல் தெரியும் - சரத்குமார்
தூத்தக்குடி: எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்தக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், "தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆவின் நிலையத்தில் இயற்கையான பனைபால் விற்பனை செய்ய நடவடிக்கை தேவை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 90% இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களும் 90% வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், போன தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக வந்து உங்களிடம் வாக்கு சேகரித்தேன். ஒரேயொரு நாள் பிரச்சாரம் வந்தால் போதும் என்று சாதாரணமாக சொன்னார்கள். ஆனால், நான் இரண்டு, மூன்று நாட்கள் வந்த பிறகு, விழுந்து விழுந்து கவனித்தார்கள். இப்போது அவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளனர்.
இப்போது இந்த சரத்குமார் கண்ணுக்கு தெரியவில்லையா?. தெரியும், இந்த தேர்தலில் தெரியும். 26 தொகுதிகளில் நாங்கள் எங்கு போட்டியிட்டாலும் தெரியும். இனிமேல் அவர்களுக்கு நாங்கள் யார் என்று தெரியும். ராதிகா சரத்குமார் எங்கு போட்டியிட்டாலும் ஜெயிப்பார்.
நாங்க என்ன கருவேப்பிலையா? விடமாட்டோம்... நிச்சயம் போட்டியிடுவேன் - அதிரடி கிளப்பிய ராதிகா
தமிழகத்தில் கோவில்பட்டி, ராதாபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தென்காசி, ஆலங்குளம் என எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் பேட்டியிடுவேன்.
'மாற்றத்திற்கான கூட்டணி' என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி உறுதியானது" என்று பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.