கனிமொழியின் 3 ஆண்டுகால 'தூத்துக்குடி' ப்ளான் வீணாகவில்லை?
Recommended Video
தூத்துக்குடி: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட 3 ஆண்டுகளாக செய்த களப்பணி அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்துகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளாக இருந்த போதும் தொடக்க காலங்களில் இலக்கியம், பத்திரிகை துறையில் மட்டுமே ஆர்வத்தை காட்டினார் கனிமொழி. அதன் பிறகு 2007-ம் ஆண்டு திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார்.
2013-ம் ஆண்டு 2-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யானார். இருப்பினும் திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான அந்தஸ்து அவருக்குக் கிடைக்கவில்லை. கனிமொழியின் எதிர்பார்ப்பாக அது இருந்தும் அது பற்றி அவர் பெரிதும் வெளிப்படுத்திக் கொண்டதும் இல்லை.
தமிழகத்தில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் ஹெச்ராஜா.. தமிழிசை பின்னடைவு
3 ஆண்டு பிளான்
திமுகவின் மகளிர் அணி செயலராக உள்ள கனிமொழி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்து களப்பணிகளைத் தொடங்கினார். தமது எம்.பி. தொகுதி நிதி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தார்.
தூத்துக்குடி விசிட்
தூத்துக்குடி தொடர்புடைய எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் கனிமொழி அங்கே சென்றுவிடுவார். அந்த அளவுக்கு தூத்துக்குடியுடன் தமக்கு ஒரு நெருக்கமான உறவை கனிமொழி ஏற்படுத்தியிருந்தார். அக்கட்சியினரும் கனிமொழிதான் இங்கே போட்டியிடப் போகிறார் என்பதால் எந்த கோஷ்டி பூசல்களுக்கும் இடம்கொடுக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
திட்டமிட்ட பணி
இப்படி திட்டமிட்டு பணியாற்றியதால் தற்போது கனிமொழி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். இத்தனைக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவர்.
ஜாதி வாக்குகள் கைவிட்டன
ஜாதிய வாக்குகளை நம்பி தமிழிசை களம் இறங்கியிருந்தார். இருந்தபோதும் பாஜகவுக்கு எதிரான தமிழக மனநிலை தமிழிசைக்கு சாதகமாக இல்லை என்பதையே தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்துகிறது.