முழுவீச்சில்... ஒட்டப்பிடாரத்தில் வீடு வீடாக சென்று கனிமொழி எம்.பி. ஓட்டு வேட்டை
தூத்துக்குடி: தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை ஒட்டப்பிடாரம் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருப்பதால், வீதி,வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இப்படி கூட வழி உள்ளதா? ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் டிடிவி தினகரன்.. அமமுக புது வியூகம்!
இந்நிலையில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டு பகுதிகளான அன்னை இந்திராநகர் பிள்ளையார் கோவில் முன்பு பிரச்சாரத்தை தொடங்கினார். பின்பு அய்யப்பன்நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தே சென்று, வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். இன்று மாலை தூத்துக்குடி ஒன்றியம் சோரீஸ்புரம், அந்தோணியார்புரம், மறவன்மடம், சிலுக்கன்பட்டி, கீழகூட்டுடன்காடு, புதுக்கோட்டை, செந்தியம்பலம், கட்டாலங்குளம், புதூர், முடிவைத்தானேந்தல் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 13-ந்தேதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 15-ந்தேதி தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்.