சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் சென்ற கனிமொழி...!
தூத்துக்குடி: தினத்தந்தி முன்னாள் அதிபர் மறைந்த சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு சென்ற திமுக எம்.பி.கனிமொழி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சனிக்கிழமை அன்று சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் அதில் திமுக சார்பில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. மாவட்டச் செயலாளர்களான கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட அந்த பக்கம் தலைகாட்டவில்லை. மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைத்ததாலும், அரசு விழாவாக நடத்தியதாலும் அதில் திமுக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இதனிடையே தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி நேற்று திடீரென திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு சென்றார். அவருடன் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சென்றிருந்தனர். சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், சிவந்தி ஆதித்தனார் செய்த சமுதாய பணிகளை பாராட்டிவிட்டு சென்றார். நிகழ்ச்சி நடைபெற்று மூன்று நாட்கள் கழித்து வந்தாலும் அவரது வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
ஏனென்றால், திங்கள்கிழமை சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு கனிமொழி சென்ற நிலையில், அதற்கு முதல் நாளான ஞயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் தினத்தந்தி நாளிதழ் மீது தனக்கிருக்கும் வருத்தத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். தினத்தந்தியின் தலைப்புச் செய்திகளை நேரடியாகவே குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த சூழலில் கனிமொழி திடீரென நேற்று சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்.
ராஜ்யசபா தேர்தல்: திமுகவில் 3 சீட்டு..ஈரோடு முத்துச்சாமி, சிவசங்கர், என்.ஆர். இளங்கோ போட்டா போட்டி
இது தொடர்பாக மாநில மகளிரணி நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது; ''தலைவர் பேசியதற்கும் அக்கா அங்கு சென்றதற்கும் எந்த தொடர்புமில்லை. சனிக்கிழமை அன்று அக்கா வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனக்கு அழைப்பிதழ் வைத்ததை மதித்து அவர் அங்கு சென்று மரியாதை செலுத்தியிருக்கிறார். இதில் உள் அரசியல் எதுவுமில்லை'' எனத் தெரிவித்தார்.