தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி
தூத்துக்குடி: தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை சவுந்திரராஜன் பேசினால் பரவாயில்லை என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை காட்டிலும் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசம் என்பதால் திமுகவுக்கு இது வெற்றியே இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஏற்க முடியாது
அப்போது அவர் கூறுகையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை என்னால் ஏற்க முடியாது. இது குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அதிமுக தோல்வி என கூறுவதை என்னால் ஏற்க முடியாது என தெரிவித்திருந்தார்.
தமிழிசை
இதற்கு பதிலடியாக தூத்துக்குடியில் எம்பி கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.
முதல் குற்றவாளி
எனக்கு தெரிந்தவரை திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றார் கனிமொழி. மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து வைகோ காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். அதாவது காங்கிரஸ்தான் முதல் குற்றவாளி என்றார்.
விரிசல்
இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, வைகோ அரசியல் நாகரிகமற்றவர். ஒரு கட்சிக்குக் கூட அவர் விசுவாசமாக இருந்ததில்லை என்றார். இதற்கு வைகோவும் பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறுகையில் காங்கிரஸ் தயவால் நான் எம்பியானேன் என கூறுவது தவறு என்றார். இப்படியாக பிரச்சினைகள் எழுந்துள்ளதால் திமுக- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.