மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளிருப்பு போராட்டம்... கோவில்பட்டி காங்கிரஸ் கலாட்டா..!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மண்ணெணெய் கேனுடன் தலைமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் மாவட்ட தலைவரை மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருக்கும் பஞ்சாயத்து போதாது என்று இது வேறயா என சத்தியமூர்த்தி பவன் இதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கனிமவள கொள்ளை... தமிழக அரசு தடுக்க வேண்டும் -வேல்முருகன்
கோஷ்டிப்பூசல்
கண்ணையும் இமையையும் பிரிக்க முடியாது என்பது போல் காங்கிரஸ் கட்சியையும் கோஷ்டிப்பூசலையும் பிரிக்கவே முடியாது போல் தெரிகிறது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இதே நிலை தான். இதற்கு சமீபத்திய உதாரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த நிகழ்வை கூறலாம். புதிய நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி மண்ணெணெய் கேனுடன் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டல்
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள காமராஜை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவில்பட்டி, கயத்தார் வட்டார தலைவர்கள் பதவி நீக்கத்தை கண்டித்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்தி பரபரப்பை பற்ற வைத்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தங்கள் கோரிக்கையை கட்சித் தலைமை பரிசீலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் எனக் கூறி மண்ணெணெய் கேனை கையில் வைத்திருப்பது தான்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவலறிந்து சென்ற கோவில்பட்ட போலீஸார் காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, விவரத்தை சத்தியமுர்த்தி பவனின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே உள்ள பல பஞ்சாயத்துக்களில் இதுவும் ஒன்றாக சேர்த்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தலைமையகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கொள்கை பிடிப்பு
இதனிடையே மத்தியில் ஆட்சியில் இல்லாத போதும் இது போன்ற தொண்டர்களாலும், கட்சியினராலும் காங்கிரஸ் கட்சி உயிர்ப்புடன் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆட்சி மாறியதும் கட்சி மாறுவது போல் பலரும் டெண்டருக்காக கரைவேட்டிகளை மாற்றிக் கட்டுவதற்கு மத்தியில் கொள்கை பிடிப்புடன் காங்கிரஸில் இருப்பவர்கள் ஏராளம் என்பதை யாரும் மறுக்க இயலாது.