திடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்!
பணியின்போதே இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்துவிட்டார்
தூத்துக்குடி: பரலோகமாதா ஆலய விழா பாதுகாப்பு பணிக்கு போன இன்ஸ்பெக்டர், அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டதுடன், மூச்சு திணறி உயிரிழந்தது தூத்துக்குடியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் இசக்கிமுத்து. வயது 55.
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில், புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவின் பாதுகாப்பு பணிக்காக நேற்று இரவு சென்றிருந்தார்.
அப்போது அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கேயே சரிந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறி போன சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ரெப்கோ வங்கி டெபாசிட் விவகாரம்.. தீர்ப்பை தள்ளி வைத்தது ஹைகோர்ட்
இசக்கிமுத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடி ஆகும். செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இசக்கிமுத்து இறந்த செய்தியை கேட்டதுமே மாவட்ட போலீஸ் எஸ்பி அருண் பாலகோபாலன் உடனடியாக சென்று அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார்.
பணியில் இருக்கும்போதே இசக்கி முத்து இறந்த சம்பவம் சக போலீசாரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.