குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் விமரிசை.. அக். 8ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசராவுக்கு பிறகு, அதிகப்படியாக குலசையில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா விழாவுக்கு திரள்கிறார்கள்.
விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் தனித்துவம். அதிலும் காளி வேடம் தரிப்போர்கள், 48 நாட்கள் கடுமையான விரதம் இருப்பது விசேஷம்.
2019ம் ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தசரா திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுரவதம் அக்டோபர் 8ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், இரவு, குலசை கடற்கரையில் எழுந்தருளும் அம்பிகை, மகிஷனை வதம் செய்வாள்.
திருவிழாவை முன்னிட்டு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்யவருகை தருவார்கள் என்று தெரிகிறது. ஞானமூர்த்தீஸ்வரருடன், முத்தாரம்மன் மூலஸ்தானத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், அம்மையையும், அப்பனையும் சேர்ந்து தரிசனம் செய்யும் பெரும் பாக்கியம், பக்தர்களுக்கு கிடைக்கிறது.
மனநல பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை பேறு தடை போன்றவற்றை தீர்க்கவல்ல அம்பிகை முத்தாரம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.