குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - 26ல் சூரசம்ஹாசம்
குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 26ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். ஆன்லைனின் புக் செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா ஆண்டு தோறும் பத்து நாட்கள் நடைபெறும். மைசூரு தசராவிற்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது குலசை தசராதான். இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி இன்றி நடைபெற்றது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் கொடியிறக்க நிகழ்வுகளில் பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் யூடியூப் சேனலிலும், உள்ளுா் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒலிபரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
தசரா திருவிழாவின் 2ஆம் நாளான நாளை அக்டோபர் 18ஆம் தேதி முதல் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி வரை பக்தா்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம்.
பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கு வர அனுமதியில்லை. பக்தா்கள் தங்கள் ஊா்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். சிறப்பு அன்னதானத்திற்கு அனுமதியில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தா்கள் பூ, மாலை, தேங்காய் பழ வகைள் கொண்டு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவா்கள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளவா்கள், சுவாசம் தொடா்பான நோய், இருதய நோய் கண்டவா்கள், கா்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. மறுநாள் கொடியிறக்கத்துடன் தசரா விழா நிறைவடையும்.