குலசை தசரா திருவிழா 17ல் கொடியேற்றம் - சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை
பிரச்சித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி: பிரச்சித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நாளான கொடியேற்றம், சூரசம்ஹாரம், கொடியிறக்கம் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ளது புகழ்பெற்ற ஞானமூர்த்திசுவரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் இத்திருவிழாவிற்காக சுமார் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து தசரா திருவிழாவின் போது பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
குலசை தசரா திருவிழாவை காண்பதற்காகவே, தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இருந்தும் பார்வையாளர்களும், பக்தர்களும் வருவது வழக்கம். இந்த ஆண்டு தசரா விழா 17ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் 17ஆம் அன்று திருவிழா கொடியேற்றத்தின்போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. மேலும் விழாவின் முக்கிய நாளான கொடியேற்றம், சூரசம்ஹாரம், கொடியிறக்கம் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொடியேற்றம் தொடங்கி தினசரியும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை 8000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி புறப்பாடு வெளியில் செல்லாமல் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெறவும், உற்சவ மூர்த்தி வீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறும். இதில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடத்தலாம்.
திருவிழா நிகழ்வுகளை யுடியூப் மற்றும் உள்ளூர் சேனல்கள் மூலம் பக்தர்கள் காணும் வகையில் ஒளிபரப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோவில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் கோவில்களில் விரதத்தை முடித்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டளைதாரர்கள் வாங்கிக்கொடுக்கும் அபிஷேக பொருட்கள் பெற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் அபிஷேகத்தை அமர்ந்து பார்க்க அனுமதி இல்லை. கோவில் நிர்வாகத்தின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.