குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. இன்று சூரசம்ஹாரம்.. பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றது. மைசூரில் நடைபெறும் தசராவுக்கு அடுத்தபடியாக, குலசை தசரா பிரசித்தி பெற்றது. குலசை முத்தாரம்மன் கோவிலின் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம் தொடங்கியது.. தினசரி 3000 பேருக்கு அனுமதி
காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள்
தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வரும் பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெவ்வேறு ஊர்களுக்கு சென்று, தருமம் எடுப்பதை அரசு தடுத்து வருகிறது. எனவே பக்தர்கள் தங்கள் ஊருக்குள் காணிக்கை பெற்று வருகிறார்கள்.
சூரசம்ஹாரம்
தசரா விழாவின் சிகர நிகழ்ச்சி சூரசம்ஹாரம். 10ம் திருநாளான இன்று திங்கட்கிழமை இரவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
சிம்ம வாகனத்தில் அம்பிகை
இன்று, இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கோவிலின் முன்பாக எழுந்தருளுகிறார். அங்கு மகிஷாசூரனை அம்மன் வதம் செய்வார். சிங்க தலை, எருமை தலையுடனும் அடுத்தடுத்து உருமாறி போர்புரிய வரும் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்கிறார். பின்னர், 11ம் திருநாளான நாளை அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி பவனி வருகிறார். மாலையில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படுகிறது.
பாலாபிஷேகம்
தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களிலேயே காப்பு அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்கிறார்கள். ஊரடங்கு காரணமாக இன்றும், நாளையும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. 28ம் தேதி புதன்கிழமை மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.
கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம்
வழக்கமாக குலசை தசரா திருவிழாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இவ்வாண்டுதான் முதல் முறையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே கடற்கரையில், லட்சக் கணக்கான பக்தர்கள் சூழ, காளி வேடமிட்டோர் சாமியாட, கோலாகலமாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி, இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே நடைபெறவிருக்கிறது. குலசை திருவிழாவையொட்டி சுமார் 1,800 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் அந்தந்த பகுதியிலேயே காப்புகளை கழற்றி, விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே தசரா குழுவினர் தங்கள் சொந்த ஊர்களில் விழாக்களை நடத்தி அங்கேயுள்ள தசரா பிறைகளிலும், அம்மன் கோவில்களிலும் விழாவை கொண்டாடுகிறார்கள்.