குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
Recommended Video
திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவின் மகுட நிகழ்வாக, இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம், குலசை என்ற பெயராலும் புகழ் பெற்றது. இங்குள்ள ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா விழா, மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே அதிக பக்தர்கள் கூடும் விழாவாகும்.
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் தசரா விழாவை அரசே நடத்துகிறது. குலசை முத்தாரம்மன் தசரா விழா பக்தர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்போடும் நடக்கிறது. ஏனெனில் இங்கே முத்தாரம்மனை வேண்டிக்கொண்டு, காப்பு கட்டும் பக்தர்கள் பல வித வேடங்களை அணிந்து, தனியாகவோ, அல்லது குழுவாகவோ (செட்), வீடுகளுக்கு சென்று, காணிக்கை பெற்று, அதை குலசை முத்தாரம்மன் கோவிலில் சென்று சேர்ப்பார்கள்.
இதில் காளி வேடம் அணிந்திருப்போர் மிக தீவிரமாக விரதம் இருக்க வேண்டியிருக்கும். அவர்கள்தான் குழுக்களின் தலைமையாகவும் செயல்படுவார்கள். ஏனெனில், குலசை தசரா என்பதே முழுக்க முழுக்க காளி வழிபாடுதான். இதேபோன்று, சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், முருகன், சுடலைமாடசாமி, பெண் வேடம், குரங்கு, கரடி உள்ளிட்ட பல வகை வேடங்களை பக்தர்கள் தரித்து அம்மனுக்கு காணிக்கையை சேர்ப்பார்கள்.
குலசை தசரா விழா, செப்டம்பர் 29ம் தேதி, ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் கொடியேற்றத்தோடு துவங்கியது. நாள் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தபடி இருந்தது. இன்றைய தினம், விஜயதசமி நாளில், குலசை கடற்கரையில், இரவு 12 மணியளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்வாள். இதைக்காண, தமிழகம் முழுவதிலுமிருந்து மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும், குலசை நகரில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இன்றையதினம் சுமார் 6 லட்சம் பக்தர்கள் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பிய பக்கமெல்லாம், வேடமணிந்த பக்தர்களாக தெரிகிறார்கள். சூரசம்ஹாரம் நிகழ்வையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2000த்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள், கன்னியாகுமரி, நாகர்கோவில், உவரி, குட்டம் வழியாக வரும் வாகனங்கள், திசையன்விளை, உடன்குடி மார்க்கமாக வரும் வாகனங்கள் நிறுத்த, தனித்தனி தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக, ஏராளமான சிறப்பு பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்து துறை இயக்கி வருகிறது.
புதன்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும். 12ம் தேதி வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு, சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா இனிதே நிறைவு பெற உள்ளது.