"இந்தாங்க.. கொரோனா கசாயம் குடிங்க" ஜான்சி செய்த துரோகம்.. அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிய கணவர்!
நகை திருடிய மனைவியால் மனம் நொந்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்
தூத்துக்குடி: "இந்தாங்க.. கொரோனா கசாயம் குடிங்க என்று சொல்லி குடிக்க வைத்தேன்.. என் கணவர் குடிச்சிட்டாரு.. நான் நகையை கொள்ளை அடிச்சிட்டேன்" என்று மனைவி ஜான்சி வாக்குமூலம் தந்தபோதே போலீசார் மட்டுமல்ல... கணவன் வின்சென்ட்டும் சேர்ந்தே அதிர்ந்து போனார்.. இப்போது ஜான்சி ஜெயிலில் உள்ள நிலையில், அவமானமும், துரோகமும் தாங்க முடியாமல் வின்சென்ட் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்!
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்சென்ட்... துறைமுக ஊழியர்.. இவரது மனைவி ஜான்சி.. ஏலச்சீட்டு நடத்தி வந்தார்... இவர்களுக்கு 2 மகள்கள்... 2 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் தம்பதி மட்டும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு என்பதால் இருவருமே வீட்டுக்குள் முடங்கி இருந்தனர்.. 4 நாளைக்கு முன்பு வின்சென்ட் தாளமுத்து நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்திருந்தார்.
கொள்ளை
அதில், பூட்டப்பட்ட தன்னுடைய வீட்டில் இருந்த பீரோவில் 100 சவரன் நகைகள் கொள்ளை எனவும் கண்டுபிடித்து தரவும் சொன்னார். 2 பேரும் வீட்டிலேயே இருந்த நிலையில் கொள்ளை எப்படி போனது என்பது குறித்து போலீசார் ஆய்வில் இறங்கினர்.. அதுமட்டுமல்லாமல் 100 சவரனை ஏன் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது.
நகைகள்
விசாரணையும் ஆரம்பமானது.. துறைமுக ஊழியர் என்றாலும் வின்சென்ட் கஷ்டப்பட்டுதான் பணம் சம்பாதித்துள்ளார்.. 2 பெண்களையும் கல்யாணம் செய்து தந்துவிட்டு, மீதமிருந்த பணத்தை மிச்சப்படுத்தி அதில்தான் நகைகளையும் சேமித்து பேங்க் லாக்கரில் வைத்திருந்தார்.
லாக்கர்
சில நாட்களுக்கு வின்சென்ட்டுக்கு ஒரு போன் வந்துள்ளது.. அதில் பேசிய பெண், வங்கியில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்து கொண்டு போய்விடுங்கள் என்று சொல்லி உள்ளார்.. அதனால்தான் வின்சென்ட்டும் ஜான்சியை அழைத்து கொண்டு லாக்கரில் இருந்து நகைகளை கொண்டுவந்து வீட்டில் இருந்த பீரோவில் வைத்துள்ளார்.
ஜான்சி
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார் உடனே சம்பந்தப்பட்ட பேங்குக்கு போன் செய்து யார் பேசினார்கள் என்று விசாரித்தனர். ஆனால், யாருமே பேங்கில் இருந்து போன் செய்யவில்லை என உறுதியானதும், போலீசார் மேலும் குழம்பி விட்டனர்.. வீட்டில் 2 பேர் மட்டுமே இருக்கும் நிலையில், யார் வீட்டிற்குள் வந்திருப்பார்கள் என்று சந்தேகம் அதிகமாகவே எழுந்தது.. அதனால் ஜான்சியிடம் விசாரணை ஆரம்பமானது.. எசகுபிசகாக உளற ஆரம்பித்தார் ஜான்சி.. பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். இதை பற்றி அவர் சொன்னதாவது:
பண தேவை
''ஏலச்சீட்டு நடத்திவந்தேன்... நிறைய பேர் ஏலத்தொகையை கட்டாமல் ஏமாற்றிவிட்டனர்.. 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்தது.. வட்டி மட்டுமே மாசம் 35 ஆயிரம் ரூபாய் கட்டினேன்.. என்னால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியல.. என் கணவர் ஒரு கஞ்சன்.. நான் பணம் கேட்டால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்தார்.. எல்லா நகையையும் பேங்கில் கொண்டு போய் வைத்துவிட்டார்.. பண தேவைக்கு அந்த நகையை எடுக்க நான் முடிவு செய்தேன்.
வாக்குமூலம்
அதனால வீட்டுக்கு வெளியே போய் இன்னொரு போனில் இருந்து நான்தான் என் கணவருக்கு பேசினேன்... பேங்க் லாக்கரில் பாதுகாப்பில்லை என்று சொல்லி நகையை கொண்டு போக சொன்னேன்.. என் குரலையும் மாற்றி பேசினேன்.. நான் நினைச்ச மாதிரியே பேங்கில் இருந்து நகையை எடுத்து வந்து வீட்டில் வைத்தார்.. இந்த மொத்த நகையையும் எடுக்க முடிவு செய்தேன்.. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தர்றேன்னு சொல்லி... அதில் தூக்க மாத்திரையையும் கலந்து குடுத்துட்டேன்.. அதை என் கணவர் குடிச்சிட்டு தூங்கிட்டாரு.
சாவிக்கொத்து
அவர் இடுப்பிலதான் சாவிக் கொத்து இருக்கும்.. தூங்கினபிறகு அதை எடுத்து பீரோவில் இருந்து 93 சவரன் நகையை எடுத்துக்கிட்டேன்.. வீட்டுக்கு வெளியே குழிதோண்டி புதைச்சேன்.. பிறகு பீரோவில் இருந்த துணிகளை இழுத்து வெளியே போட்டு கலைத்தேன்,.. பீரோ சாவியை தூக்கி வீசிட்டேன்" என்றார். இதையெல்லாம் கேட்டு அரண்டு போன போலீஸார், ஜான்சியை கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தற்கொலை
ஜான்சி கைதாகி 2 நாள் ஆன நிலையில், வின்சென்ட் மன உளைச்சலிலேயே இருந்துள்ளார்.. மனைவியே இப்படி ஒரு நாடகத்தை ஆடியதும், ஏமாற்றியதையும் அவரால் தாங்கவே முடியவில்லை.. நகை காணவில்லை என்று முதன்முதலில் வின்சென்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தபோது ஜான்சிதான் ஓவராக நடித்து அழுது புலம்பி உள்ளார்.. 2 நாட்களும் வீட்டில் தனியாக இருந்த வின்சென்ட் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.