ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் தாக்கினர்- மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பரபரப்பு அறிக்கை
சாத்தான்குளம்: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் தாக்கியது நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததில் தெரியவந்தது என மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்த சென்றார். அவர் அங்கு நடந்தது குறித்து நேரடி சாட்சியான பெண் காவலரிடம் வாக்குமூலமாக பதிவு செய்தார்.
சாத்தான்குளம் காவல் மரணங்கள்-மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடும் கண்டனம்
அறிக்கை
அதை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் பாரதிதாசன் கூறுகையில் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் லத்தியால் விடிய விடிய அடித்துள்ளனர். இது நேரடி சாட்சியின் வாக்குமூலம் மூலம் தெரியவந்தது.
மேஜை
காவல் நிலையத்தில் லத்தி மற்றும் மேஜையில் ரத்தக் கறை இருந்ததை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் சாட்சியம் அளித்தவர் கூறினார். முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டன. சாட்சியம் அளித்த பெண் காவலரை மற்ற காவலர்கள் மிரட்டினர். லத்தியை கேட்ட போது காவலர் மகாராஜன் முன்னுக்கு பின் முரணான வகையில் பேசினார். மீண்டும் மீண்டும் லத்தியை கேட்ட போது அங்கிருந்த மற்றொரு காவலர் எகிறி குதித்து தப்பி ஓடினார்.
ஒத்துழைப்பு
பின்னர் வற்புறுத்தி கேட்ட போது லத்தியை கொடுத்தார்கள். கூடுதல் எஸ்பியும் டிஎஸ்பியும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. காவலர் மகாராஜன் உன்னால் ஒன்றும் .... முடியாது என என்னை மிரட்டினார். தனது வாக்குமூலத்தை பதிவு செய்த தலைமைக் காவலர் ரேவதி அச்சத்துடனேயே இருந்தார்.
விசாரணை
அந்த வாக்குமூலத்தில் அவர் கையெழுத்திட தயங்கிய போது முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர் கையெழுதிட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் நான் பாதியிலேயே செல்லும் நிலை ஏற்பட்டது என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.