சந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு
தூத்துக்குடி: குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிந்து விடுகின்றன. புத்தி கெட்டுப்போனதால் சந்தேகம் ஏற்பட்டு 25 ஆண்டுகள் கூட வாழ்ந்த மனைவியையே அடித்துக்கொன்று விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஒருவர். தூத்துக்குடியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த தம்பதியரின் பெயர் மதிகுமார், அமுதா என்பதாகும். தூத்துக்குடியை அடுத்த தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்தான் மதிகுமார். அமுதாவுடன் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த தம்பதியருக்கு அஜித்குமார், அஜீஸ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அஜித்குமாருக்கு திருமணமாகி விட்டது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். அஜிஸ்குமார் பெற்றோருடன் தங்கி இருந்து தூத்துக்குடி அருகே உள்ள காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
திருமணமாகி வெள்ளி விழா கொண்டாடிய நிலையிலும் மதிகுமாருக்கும் அமுதாவிற்கும் அடிக்கடி சண்டை வருமாம், அமுதாவை சந்தேகப்பட்டு அடிப்பாராம். நேற்று இரவு மகன் வேலைக்கு சென்ற பின்னர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. நள்ளிரவில் மனைவியை கொடூரமாக தாக்கினார் மதிகுமார். இதில் கீழே சுருண்டு விழுந்து அமுதா உயிரிழந்தார்.
அமுதாவின் மரணம் மதிகுமாரின் மரமண்டைக்கு உரைக்கவே பயந்து போனார். மதி கெட்டுப்போயிருந்த நிலையில் அமுதாவின் சேலையை உத்தரத்தில் மாட்டி தூக்கில் தொங்கினார். காலையில் வெகு நேரமாகியும் மதிகுமாரின் வீடு திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்தனர்.
அமுதாவும் மதிகுமாரும் சடலமாகக் கிடந்ததைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அமுதா கழுத்தில் காயத்துடன் இருந்தைப் பார்த்து அஜிஸ்குமார் அலறி துடித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 25 ஆண்டுகாலம் தம்பதியராக வாழ்ந்த இருவரின் மரணம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.