கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் மெகா மருத்துவ முகாம்
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் ஆகியோரது ஏற்பாட்டில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை,சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவ கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் தூத்துக்குடியில் உள்ள அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் நடந்தது.
இந்த இலவச மருத்துவ முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டனர். அப்போலோ சிறப்பு மருத்துவ மனை சார்பில் இரத்தம், சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
இம்மருத்துவமனை சார்பாக இருதய சிகிச்சை நிபுணர்கள்,பெண்கள் நல மருத்துவர், பொது மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர், நுரையீரல் சிகிச்சை நிபுணர், மூட்டு மற்றும் எலும்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் 990 பேர் கலந்து கொண்டனர்.
கற்பக விநாயகா பல் மருத்துவ கல்லூரி சார்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் 510 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பல் சுத்தம் செய்தலுக்காக 154 பேரும், பல் சொத்தை அடைத்தலுக்காக 55 பேரும், பல் எடுப்பதற்காக 49 பேரும், செயற்கை பல் பொருத்துதலுக்காக 53 பேரும் கலந்துகொண்டு பலன் பெற்றனர். 54 பேர் எக்ஸ்ரே எடுத்தலில் பலன் பெற்றனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் 500 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 225 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.