ஆற்றில் கரைந்த 6 உயிர்கள்! சோகமே உருவான தூத்துக்குடி! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்!
தூத்துக்குடி : தூத்துக்குடி தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த ஆறு பேர் பலியான நிலையில், தூத்துக்குடி சிலுவைபட்டியில் உள்ள பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்து திமுக சார்பில் நிதி உதவி வழங்கினார்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும்.
'பசிலிக்கா' அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம்.
அனிதா ராதாகிருஷ்ணனை விடாமல் விரட்டும் அமலாக்கத்துறை.. ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம்..பரபர பின்னணி
தூத்துக்குடியில் அதிர்ச்சி
அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ்(36), தாவிதுராஜ்(30) ஆகியோர் உள்பட 57 பேரை கொண்ட குழுவினர் பூண்டி மாதா பேராலயத்துக்கு நேற்று முன்தினம் ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலாவாக சென்றனர் இவர்கள் நேற்று காலை பூண்டி மாதா பேராலயம் அருகில் உள்ள கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
6 பேர் பலி
ஆற்றில் நீரோட்டம் இருந்த நிலையில் ஆற்றில் இறங்கி குளித்தவர்கள் அதன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் மற்றும் ஹெர்பல், பிரவீன்ராஜ் ஈசாக் ஆகிய ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள் இதைத் தொடர்ந்து அவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுதல்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவை பட்டி கிராமத்திற்கு வருகை தந்த மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் உள்ளிட்டவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான ஆறு பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நிவாரண உதவிகள்
மேலும் பலியானோர் குடும்பத்தினருக்கு தல ஒரு லட்ச ரூபாய் வீதம் 6 குடும்பத்திற்கும் 6 லட்ச ரூபாயை திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நிவாரண உதவிகளும் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எடுத்து வருகிறார். அனைத்தும் விரைவில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.