இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை... தமிழிசைக்கு கடம்பூர் ராஜூ பதிலடி
இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது: மலர்கள் இயற்கையாக மலர வேண்டும். இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குற்றச்சாட்டு சொல்வது ஒன்றையே வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் எம்.பியாக இருந்த போது தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை பெற்று தந்தார் என்பதை பட்டியலிட தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, தமிழகத்தில் தண்ணீர் இல்லை, புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார்.
இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம்.
காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குத்தான் தற்போது கடம்பூர் ராஜு பதில் அளித்துள்ளார்.