நோட்டாவை விட கூடுதல் ஓட்டு வாங்கி காட்டுங்க பார்ப்போம்.. தமிழிசையை கலாய்க்கும் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் தாமரை மலராது என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
கோவில்பட்டி: "வர போகிற தேர்தலிலாவது நோட்டாவைவிட கொஞ்சம் அதிக ஓட்டுகள் வாங்குவது பாஜகவுக்கு நல்லது" என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி தந்துள்ளார்.
அதிமுக-பாஜக கட்சிகள் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். "தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கவில்லை என்றும், இதனால் மலர போவது தாமரைதான் என்றும் அதிமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலடி தந்துள்ளார். அப்போது அவர் சொன்னதாவது: "தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கிறதா, இல்லையா என்பதை மக்கள்தான் கூறவேண்டும்.
தமிழிசை போன்றவர்கள் எங்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
வருகிற தேர்தலிலாவது நோட்டாவைவிட அதிக ஓடுடுகள் வாங்குவது பாஜகவுக்கு நல்லது. அதிமுகவுக்கு அதிக வாக்கு வங்கிகள் இருப்பது மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் தாமரை மலரப் போவது இல்லை. அதிமுக ஆட்சிதான் தொடரும்" என்று தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி தந்துள்ளார்.